
1.
நெருங்கி வா
அல்லது
ஒதுங்கி செல்
வெறும்காற்று நிரம்பிய
இடைவெளிக்குள்
நம் காதலை நிரப்பாதே!
2.
சப்தங்கள் தொலைந்த
ஓர் இரவில்
முத்தங்களால் என்னுயிர்
நிரப்பினாய்.
இப்போது,
அனல் நிரம்பிய அதிகாலைகள்
உயிர்வாங்குகின்றன
உன்
ஞாபக முத்தங்களால்!
3.
கடற்கரை மணலெங்கும்
விரவிக்கிடக்கும்
கால்தட கிறுக்கல்களில்
இன்னமும்
ஓடிப்பிடித்து விளையாடுகின்றன
சில்லுகளாய் உடைந்த
நம் காதலின் மிச்சங்கள்.
4.
மனதெங்கும் நுழைந்துவிட்டபின்
புணர்வது ஒன்றும்
பாவமில்லை என்றவள்
நீ.
வெந்நீர்பொழுதொன்றில்
என் நிழலையும்
நிராகரித்துச் சென்றவளும்
நீ.
உயிருள்ள பொம்மைகளானோம்
நானும் என் காதலும்.
5.
நடைபாதை செடியில்
எவ்வித குற்றவுணர்வுமின்றி
இலைகளை கிள்ளி எறியும்
மனிதர்கள் நிறைந்த
இப்புவியில்
தவறுதலாய் பிறந்துவிட்டோம்
நீ
நான்
நம் காதல்.
















